பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வீட்டுமனைகளுக்கு பட்டாக்கள் வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை – சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று 12.02.2024 தலைமைச் செயலகத்தில் உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வருவாய் மற்றும் பிற துறைகளில் உள்ள நிலங்களை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டங்கள் நடைபெறும் இடங்களில், நில உரிமை மாற்றம் செய்வது குறித்தும், பயனாளிகளுக்கு விற்பனை பத்திரம் வழங்குவது, பட்டாக்கள் வழங்குவது மற்றும் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பட்டா வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிகளில் உள்ள நில உரிமை மற்றும் வாழ்விட உரிமை தொடர்பான பிரச்சனைகளை குறித்து எடுத்துரைத்தனர். இது குறித்து அமைச்சர்களும் தங்களது ஆக்கபூர்வமான கருத்துகளை எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "நத்தம் நிலப் பட்டாக்கள் கணினியில் ஏறாமல் இருந்தன. 300 வருவாய்
வட்டங்களில் இந்த நத்தம் பட்டா இருக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு கோடியே 40 லட்சம் பட்டாக்கள். இவற்றில் 121 வருவாய் வட்டங்களில் இணைய வழியில் பட்டா மாறுதலை நாம் செய்து முடித்துள்ளோம். மீதியுள்ள வருவாய் வட்டங்களில் உள்ள நத்தம் பட்டாக்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் இணையத்தில் ஏற்றி முடிக்கப்படும். இப்படி நம்முடைய கழக அரசு மக்களுடைய வாழ்விட உரிமையை உறுதி செய்யத் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது." என்று தெரிவித்தார்.