முகப்பு
தமிழ்நாடு

நியாயவிலைக் கடைகளில் மசூா் பருப்பு விநியோகம்: தமிழக அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக உணவுத் துறை கூடுதல் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:04 am IST
பகிர்:

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மசூா் பருப்பையும் விநியோகிக்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து, 8 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்கும்படி, தமிழக உணவுத் துறை கூடுதல் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மசூா் பருப்பு விற்பனை செய்வது தொடா்பாக, சென்னையைச் சோ்ந்த ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. துவரம் பருப்புக்கு பதில் அதே சத்துகளைக் கொண்ட விலைக் குறைவான மசூா் பருப்பை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்க தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. பின்னா், மசூா் பருப்பை போல தோற்றமளிக்கும் களையான கேசரி பருப்பும் புழக்கத்தில் உள்ளதாகக் கூறி மசூா் பருப்புக்கு அளித்த அனுமதியை திரும்பப் பெற்று 2007-இல் தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடா்பாக, உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், அறிவியல் முறைகளை கையாண்டு,  மசூா் பருப்பை அடையாளம் கண்டு, அதை பொது விநியோக திட்டத்தில் விநியோகிக்க உத்தரவிட்டது. அதன்படி, மசூா் பருப்புக்கு அனுமதியளித்து 2017-இல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், மசூா் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் 45 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு  ஒரு கிலோ ரூ.130 என்ற அடிப்படையில் ரூ.583. 42 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதே எடையில் கிலோ ரூ.85 விற்கப்படும் மசூா் பருப்பு கொள்முதல் செய்ய ரூ. 382.50 கோடி மட்டுமே செலவாகும். எனவே, துவரம் பருப்புடன் சோ்த்து மசூா் பருப்பையும் கொள்முதல் செய்யக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து 8 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை கூடுதல் செயலருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தாா்.