விஜயதரணியின் பதவி விலகல் கடிதம் ஏற்பு: பேரவைத் தலைவர் அப்பாவு
விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணியின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் விஜயதரணி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக ஊடகம் மூலம் தகவல் அறியப்பட்டேன். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான செல்வப்பெருந்தகை இணையம் வாயிலாக கடிதம் ஒன்றை எனக்கும், சட்டப்பேரவை முதன்மைச் செயலருக்கும் அனுப்பினார்.
அதில், விஜயதரணி எம்எல்ஏ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று உறுப்பினராக இருக்கும் நிலையில், மாற்று கட்சியான பாஜகவில் இணைந்துள்ளார். அவர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
விஜயதரணி எம்எல்ஏ அனுப்பிய விண்ணப்பத்தில், பாரதிய ஜனதா கட்சியில் தான் இணைந்தால், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற எனது எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுகிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது. சட்டமன்ற விதிப்படி 21 படிவம் F முழுவதும் பூர்த்தி செய்து முறைப்படி தமது கைப்பட எழுதி இணையம் வாயிலாக எனக்கும், முதன்மைச் செயலாளருக்கும் பதவி விலகல் கடிதத்தை அனுப்பி இருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை விஜயதரணி எம்எல்ஏ, என்னை தொலைபேசியில் அழைத்து , தான் முறைப்படி கடிதத்தை தனது கையெழுத்தில் எழுதி அனுப்பி இருப்பதாகவும், பரிசீலிக்கவும் கோரிக்கை விடுத்தார்.
அதனை முறையாக பரிசீலனை செய்து பார்த்ததில், சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள ஒருவர் தான் பதவி விலகுவதாக தெரிவிக்க சட்டமன்ற விதியில் உள்ள படிவத்தை முறையாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதனை விஜயதரணி எம்எல்ஏ பூர்த்தி செய்து கைப்பட கடிதத்துடன் அனுப்பி உள்ளதால் பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.