முதல்வர் குறித்து அவதூறு: நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது
தமிழக முதல்வர் குறித்து சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகரை தருமபுரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சென்னை: தமிழக முதல்வர் குறித்து சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகரை தருமபுரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டது:
தருமபுரி மாவட்டம் செல்லியம்பட்டி அருகே உள்ள மணிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளி (எ) காளியப்பன்(27). இவர், நாம் தமிழர் கட்சியில் நிர்வாகியாக உள்ளார். திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது சமூக ஊடகத்தில் தவறான பதிவு மற்றும் அவதூறு செய்திகளை காளி பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வர் குறித்து ஒரு அவதூறு செய்தியை எக்ஸ் தள பக்கத்தில் காளி பதிவிட்டு உள்ளார்.
Advertisement
அதில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை, ஆனால் அதில் தொடர்புடைய காவல்துறை உயர் அதிகாரிக்கு பதவி உயர்வா என மிகுந்த அவதூறான ஒரு கார்ட்டூனை பதிவேற்றம் செய்துள்ளர்.
இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து, விசாரணை செய்தனர்.
மேலும் அப்பிரிவு போலீஸார் தருமபுரி சென்று ஞாயிற்றுக்கிழமை இரவு காளியை கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர்.
அவரிடம், வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையரகத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காளியின் எக்ஸ் தள பக்கமும் முடக்கம் செய்யப்பட்டது.