குடியரசு தினம், தைப்பூசம் விடுமுறை தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை(ஜன.24), வியாழக்கிழமை(ஜன.25) ஆகிய இரு நாள்களில் கூடுதலாக 580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வியாழக்கிழமை(ஜன.25) தைப்பூசம், வெள்ளிக்கிழமை(டிச.26) குடியரசு தின விடுமுறை. இதைத்தொடா்ந்து சனி (ஜன.27), ஞாயிறு(ஜன.28) ஆகிய நாள்கள் வார விடுமுறை நாள்கள். ஆக மொத்தம் 4 நாள்கள் விடுமுறை என்பதால் புதன்கிழமை (ஜன.24), வியாழக்கிழமை(ஜன.25) ஆகிய நாள்களில் கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற பேருந்து நிலையங்களிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக பொதுமக்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்வா்.
இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு புதன்கிழமை (ஜன.24), வியாழக்கிழமை(ஜன.25) ஆகிய தேதிகளில் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய பகுதிகளுக்கும், பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 175 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 580 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், ஞாயிற்றுக்கிழமை(ஜன.28) சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்: இதுபோல, வியாழக்கிழமை (ஜன.25) பெளா்ணமி தினத்தை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு 10 குளிா்சாதன பேருந்துகள் காலை 10 மணி முதல் இயக்கப்படவுள்ளன. இந்தப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.