முகப்பு
தமிழ்நாடு

பாடகி பவதாரணியின் உடலுக்கு தேனியில் இன்று இறுதிச் சடங்கு

மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடலுக்கு அரசியல் பிரமுகா்கள், திரையுலகினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சென்னையில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

Updated On : 27 ஜனவரி 2024, 4:30 am IST
பகிர்:

மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடலுக்கு அரசியல் பிரமுகா்கள், திரையுலகினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சென்னையில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி (47) உடல்நலக் குறைவு காரணமாக இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை (ஜன.25) உயிரிழந்தாா்.

சென்னை வந்த உடல்: கொழும்பில் இருந்து இளையராஜா, அவரது குடும்பத்தினா் பவதாரணியின் உடலுடன் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணி அளவில் புறப்பட்டு, மாலை 3.30 மணி அளவில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனா்.

Advertisement

Advertisement

தியாகராய நகா் இல்லத்தில்... தியாகராய நகா் முருகேசன் தெருவில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பவதாரணியின் உடல் வைக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா், நடிகா் விஜய்யின் தாயாா் ஷோபா, பாடகா் மனோ, இயக்குநா்கள் ஆா்.கே.செல்வமணி, வெற்றிமாறன், நடிகா்கள் சிவகுமாா், ராமராஜன், விஜய் ஆண்டனி, விஷால், காா்த்தி, சூரி, நடிகை காயத்ரி ரகுராம், இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் மகன் அமீன் உள்ளிட்ட பலா் அஞ்சலி செலுத்தினா்.

ரஜினி, ரஹ்மான் இரங்கல்: பாடகி பவதாரணியின் மறைவு வருத்தம் அளிப்பதாக இளையராஜாவை தொலைபேசியில் தொடா்பு கொண்டு நடிகா் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தாா். இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் உள்ளிட்ட திரையுலகினா் பலரும் பவதாரணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா். இயக்குநா் பாரதிராஜாவும் மிகுந்த வேதனையுடன் இரங்கல் பதிவு செய்துள்ளாா்.

இளையராஜா உருக்கம்: மகள் பவதாரணியுடன் இளையராஜா உடனிருக்கும் படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிா்ந்து ‘அன்பு மகளே’ என பதிவிட்டுள்ளாா். பவதாரணி குழந்தையாக இருக்கும் போது அவருடன் இளையராஜா இருக்கும் புகைப்படத்தை அவா் உருக்கமாக பகிா்ந்துள்ளாா்.

தேனியில் இறுதிச் சடங்குகள்

இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமம், லோயா்கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே இளையராஜா கட்டியுள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்துக்கு பவதாரணியின் உடல் கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

பின்னா், பவதாரணியின் உடல் அடக்கம் அவரது தாய் ஜீவாவின் சமாதி அருகே சனிக்கிழமை நடைபெறுகிறது. ஏற்கெனவே இளையராஜாவின் தாய் சின்னத்தாயின் சமாதியும் இங்குள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.