அடையாறு பணிமனை அருகே சென்னை மாநகர ஏ.சி. பேருந்தில் தீ
சென்னை அடையாறு பேருந்து பணிமனை அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த மாநகர ஏ.சி. பேருந்தில் தீ விபத்து
சென்னை அடையாறு பணிமனை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர குளிர்சாதன வசதிகொண்ட பேருந்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து அடையாறு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டது.
பேருந்துக்குள் தீப்பற்றியதைப் பார்த்ததும், நடத்துநரும் ஓட்டுநரும் பயணிகளுக்கு எச்சரிக்கைக் கொடுத்து உடனடியாக அவர்கள் வெளியே இறங்கியதால் நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி தப்பினர் என்று கூறப்படுகிறது.
தீ விபத்துக் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பேருந்தில் பற்றிய தீயை அணைக்கப் போராடினர். அதற்குள் பேருந்து முழுவதும் தீ பரவியது. தண்ணீரைப் பீய்ச்சி அடித்து பேருந்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டது.