அரசுப் பேருந்தில் ஏற்ற மறுப்பு: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
அரசுப் பேருந்தில் தூய்மைப் பணியாளர்களை ஏற்ற மறுப்பதாக தெரிவித்து, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
தூய்மைப் பணியாளர்கள் என்பதால் அரசுப் பேருந்தில் ஏற்ற மறுப்பதாக தெரிவித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளை மறித்து போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் அருகில் உள்ள கிராமப் பகுதியிலிருந்து தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணிக்காக நகரப் பேருந்துகளில் செல்வது வழக்கம்.
Advertisement
இந்நிலையில் இவர்கள் செல்லும் நேரத்தில் பேருந்துகளை முறையாக இயக்கப்படவில்லை என்றும், அவ்வாறு இயக்கும் பேருந்தில் ஏற்ற மறுப்பதாகவும், எங்களை கண்டால் பேருந்துகள் நிற்காமல் வேகமாக செல்வதாக புகார் கூறும் தூய்மை பணியாளர்கள் இதனை கண்டித்து தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் முன்பு தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை நேரம் என்பதால் அலுவலகத்தில் செல்பவர்கள், பள்ளி - கல்லூரிக்கு செல்பவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர்.
சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்துச் செல்வதற்காக தஞ்சை மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர ஊர்தி தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பணிக்காக அழைத்து சென்றனர்.