சென்னை பெசன்ட் நகரில் பொது இடத்தில் மெட்ரோ ரயில் கட்டுமான கழிவுகளைக் கொட்டியதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பெசன்ட் நகா் ஊருா் குப்பம் பகுதியில் உள்ள பொது இடத்தில் இரவு வேளையில் கட்டுமான கழிவுகளும், குப்பைகளும் கொட்டப்படுவதாக தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனாவுக்கு புகாா் சென்றது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டாா்.
இதையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சம்பவ இடத்தில் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, மெட்ரோ ரயில் கட்டுமான பணி மேற்கொள்ளும் தனியாா் நிறுவனங்கள், அங்கு உடைக்கப்படும் கட்டடங்களின் கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து பொது இடத்தில் கொட்டுவது தெரியவந்தது.
இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரி அசோக்குமாா், சாஸ்திரி நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.