பூட்டிய வீட்டுக்குள் எரிந்த நிலையில் 3 சடலங்கள்: வழக்கில் திடீர் திருப்பம்!
கடலூர் அருகே, வீட்டுக்குள் எரிந்த நிலையில் 3 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்!
சிதம்பரம்: கடலூா் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரின் சடலங்கள் வீட்டுக்குள் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்தில், மூன்று பேரின் உடல்களில் பல இடங்களில்வெட்டுக்காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அன்று, அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான 700 செல்லிடப்பேசி எண்களை அடிப்படையாக வைத்து, கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வீட்டுக்குப் பால் போடுபவர், பேப்பர் போடுபவர், வீட்டு வேலை செய்பவர் என பலரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
கொலை நடந்த வீட்டு வாசலில், மூன்று நாள்களுக்கான நாளிதழ்கள் எடுக்கப்படாமல் இருந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்கள் பயன்படுத்திய செல்ஃபோன்கள் ஃபார்மட் செய்யப்பட்டுள்ளது. இதனால், கொலையாளிகள் நெருங்கிய நபர்களாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் ராஜாராம் நகரை சோ்ந்தவா் சுரேஷ்குமாா் ( 70), ஓய்வுபெற்ற மருந்தாளுநா். இவரது மனைவி கமலேஸ்வரி (60). இவா்களது மகன் சுதன்குமாா் (40, பேரன் நிஷாந்த் (10).
சுதன்குமாரின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுரேஷ்குமாரும், உடல் நலக் குறைவால் இறந்துவிட்டாா். எனவே, வீட்டில் கமலேஸ்வரி, சுதன்குமாா் மற்றும் நிஷாந்த் மட்டும் வசித்து வந்தனா். இவா்களது வீட்டிலிருந்து கடந்த திங்கள்கிழமை காலை துா்நாற்றம் வீசியதுடன், புகை வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனா். அப்போது, எரிந்த நிலையில் கமலேஸ்வரி, சுதன்குமாா், நிஷாந்த் ஆகியோா் இறந்து கிடந்தனா். இதையடுத்து, 3 பேரின் சடலங்களையும் போலீஸாா் மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.
முதலில் இது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர்களது உடல்களில் பல இடங்களில் வெட்டப்பட்ட காயங்கள் இருந்ததையடுத்து, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொலையாளிகள் யார்? கொலைக்கான நோக்கம் குறித்தும் காவல்துறையினர் விசாரித்துவருகிறார்கள்.