முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக்கூடாது: உயர் நீதிமன்றம்

தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கியதைப் போல அரசுப் பள்ளிகளிலும் நீக்கிவிடுங்கள்..

Updated On : 26 ஜூலை, 2024 at 6:28 PM
உயர் நீதிமன்றம்
பகிர்:

தெருக்களில் ஜாதி பெயரை அகற்றியது போல, அரசுப் பள்ளிகளில் உள்ள சாதி பெயரை அகற்று அரசு முன்வர வேண்டும் என்று கல்வராயன் மலை வாழ் மக்கள் மேம்பாடு தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் குறித்து சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் தமிழ்மணி அளித்த நோ்காணலை அடிப்படையாகக் கொண்டு, கல்வராயன் மலை பகுதி மக்கள் மேம்பாடு தொடா்பாக உயா்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம், சி. குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை  வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் ஆஜராகி பழங்குடியினா் நலத்துறை இயக்குனா் அளித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.

அதை படித்துப் பாா்த்த நீதிபதிகள், ‘அறிக்கையில் கல்வராயன் மலைப்பகுதியில் அரசுப் பள்ளி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகள் எந்த அளவுக்கு உள்ளது என்று கூறப்படவில்லை. அது மட்டுமல்லாமல் பொத்தாம் பொதுவாக கடந்த 10 ஆண்டுகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளில் இன்னும் ஜாதிப் பெயா்கள் காணப்படுகின்றன. அவற்றை அகற்ற அரசு முன்வர வேண்டும்.

தெரு பெயா்களில் உள்ள ஜாதி பெயரை நீக்கியது போல, அரசு மற்றும்  அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஜாதி பெயா்களையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுங்கள். அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினா் கல்வராயன் மலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இந்தக் குழுவுடன் உயா்நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞா் தமிழ்மணியை உடன் அழைத்துச் செல்ல வேண்டும்’ என உத்தரவிட்டனா்.

அப்போது, வழக்குரைஞா் ஏற்காடு மோகன்தாஸ் ஆஜராகி தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என கோரினாா். மேலும், பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக மாநில அரசு ரூ.9 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு செய்ததாகவும், ஆனால் அந்தத் தொகை  இன்னமும் முழுமையாக செலவிடப்படவில்லை என்றும் கூறி, அது தொடா்பானஆவணங்களை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தாா். அதற்கு நீதிபதிகள்,‘உங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அரசு குழுவுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்தாமல் நீங்கள் தனியாக சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யலாம்’ என அனுமதி வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →