முகப்பு
தமிழ்நாடு

மூதாட்டியை கொலை செய்து அடையாற்றில் வீசிய தம்பதி விருதுநகரில் கைது

மூதாட்டியை வெட்டிக் கொலை செய்துவிட்டு சென்னை அடையாற்றில் வீசிய தம்பதியை காவல்துறையினர் விருதுநகரில் கைது செய்துள்ளனர்.

Updated On : 28 ஜூலை, 2024 at 2:51 PM
கைதான தம்பதி.
பகிர்:

மூதாட்டியை வெட்டிக் கொலை செய்துவிட்டு சென்னை அடையாற்றில் வீசிய தம்பதியை காவல்துறையினர் விருதுநகரில் கைது செய்துள்ளனர்.

சென்னை எம்ஜிஆர் நகர் மயிலை சிவமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி விஜயா. இவர் கட்டட வேலை, ஓட்டலில் வேலை செய்து வருபவர். கடந்த 17 ஆம் தேதி விஜயா வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லையாம். அவரது மகள் லோகநாயகி பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து 19 ஆம் தேதி லோகநாயகி தனது தாயார் விஜயாவை காணவில்லை என எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisement

அதில், "கடந்த 17 ஆம்தேதி வீட்டில் இல்லை, நானும் வேலைக்கு சென்று விட்டேன். பிறகு வீட்டிற்கு வந்து பார்த்த போது தாயார் விஜயாவை காணவில்லை. ஓட்டல் வேலைக்கு அவர் சென்று விட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

நீண்ட நேரமாக வரவில்லை என்று புகாரில் லோகநாயகி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து எம்ஜிஆர் போலீஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விஜயாவை தேடினர். இந்த நிலையில் விஜயாவின் வீட்டின் அருகில் வசித்து வந்த பார்த்திபன் என்பவரை விசாரணைக்கு வரும் படி போலீஸார் கடந்த 23 ஆம் தேதி அழைத்துள்ளனர். ஆனால் பார்த்திபனோ தனது மனைவி சங்கீதாவோடு சேர்ந்து வீட்டை காலி செய்து விட்டு தப்பியோடி விட்டார்.

சந்தேகம் அடைந்த போலீஸார் அவர்களது கைப்பேசி டவர் சிக்னலை வைத்து தேடினர். விருதுநகர் பகுதியில் பதுங்கி இருந்தது தெரிந்தது. இதன் பிறகு விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் உதவியோடு பார்த்திபன்- சங்கீதா தம்பதியை கைது செய்தனர்.

இது குறித்து எம்ஜிஆர் நகர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தி.நகர் காவல் துணை ஆணையரின் தனிப்படை போலீஸார் விருதுநகருக்கு விரைந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் மூதாட்டி விஜயாவை, கணவன்- மனைவியான பார்த்திபன், சங்கீதா துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து விட்டு உடலை மூட்டை கட்டி இருசக்கர வாகனத்தில் அடையாற்றில் வீசி விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீஸார் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. கைதான கணவன்- மனைவி இருவரையும் சென்னை கொண்டு வந்து விசாரித்த பிறகு தான் உண்மை தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.