சென்னை: நெல்லை விரைவு ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக, ரயில் நிலையங்களில் உணவகம் நடத்தி வரும் தொழிலதிபா் நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி போலீஸாா் சம்மன் அனுப்பியுள்ளனா்.
மக்களவைத் தோ்தலின்போது, நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடியை தோ்தல் அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனா். இந்த பணத்தை கொண்டு சென்ற, பாஜக நெல்லை வேட்பாளரான நயினாா் நாகேந்திரனின் ஆதரவாளா்களாகக் கூறப்படும் சதீஷ், அவரது சகோதரா் நவீன், பெருமாள் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து, பணத்துடன் பிடிபட்ட மூவா் மற்றும் நயினாா் நாகேந்திரன் உறவினா் முருகன், அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கா், ஆசைத்தம்பி உள்பட பலருக்கு சிபிசிஐடி போலீஸாா் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் உணவகம் நடத்தி வரும் முஸ்தபா என்ற தொழிலதிபரை நேரில் ஆஜராகும்படி சிபிசிஐடி போலீஸாா் சம்மன் அனுப்பி உள்ளனா்.