கேரளத்துக்கு தமிழக அரசு ரூ. 5 கோடி நிவாரணம் அறிவிப்பு!
வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்கு தமிழகத்திலிருந்து குழுக்களை அனுப்ப உத்தரவு.
வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு தமிழக அரசு தரப்பில் ரூ. 5 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
”இன்று (30-7-2024) கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர், தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டாக்டர் கீ.சு.சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்படவுள்ள மீட்புக் குழுவில் தீயணைப்புத் துறையிலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள் ஒரு இணை இயக்குநர் தலைமையிலும், 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினரும் கேரள அரசுடன் மீட்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணிகளில் இணைந்து பணியாற்றுவார்கள். இந்தக் குழுவானது இன்றே கேரளத்துக்குப் புறப்பட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.