சென்னையில் அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் யுபிஐ வசதி அறிமுகம்
சென்னையில் அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் யுபிஐ வசதி மூலம் இனி பயணச்சீட்டு எடுக்கலாம்.
இதுகுறித்து எம்டிசி தனது எக்ஸ் தளப் பதிவில், சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்தின் 22 டிப்போக்களிலும் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் தற்போது அனைத்து டிப்போக்களிலும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்கள் மூலம் யுபிஐ, கார்டு மற்றும் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறலாம். இதற்காக பேருந்து நடத்துநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மாநகரப் பேருந்துகளில் பொதுமக்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணிக்கலாம்.
சென்னை பேருந்துகளில் பயணிப்போர் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பேருந்துகளில் பயணிக்கும் போது ஏதேனும் பிரச்னை அல்லது சந்தேகங்கள் ஏற்பட்டால் 149 என்கிற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.