முகப்பு
தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு: 1,495 கூடுதல் பேருந்துகள்

Updated On : 5 ஜூன், 2024 at 7:13 PM
பகிர்:

பள்ளிகள் திறப்பு, முகூா்த்த நாள்கள், வார இறுதிநாள்களை முன்னிட்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 10) பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதனால் தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து சென்னை திரும்ப ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) 705 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல, பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளி, சனிக்கிழமை (ஜூன் 7, 8) 1,105 பேருந்துகள் மற்றும் சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 160 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோயம்புத்தூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில்(ஜூன் 7,8) தலா 15 பேருந்துகளும் என மொத்தமாக 1,495 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்தில் பயணிப்பவா்கள் இணையதளம் மற்றும் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் தெரிவித்துள்ளாா்.