மதுரை: தமிழகத்தில் சட்டவிரோத மதுவிற்பனையை அரசு எப்படி அனுமதிக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற மதுரை கிளை, கள்ளக்குறிச்சி சம்பவம் போல மற்றொரு சம்பவம் நடக்காமல் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோத மதுவிற்பனையை அரசு எப்படி அனுமதிக்கிறது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், காவல்துறை அலட்சியத்தால்தான் பலர் உயிரிழந்துள்ளனர். சட்டவிரோத மது விற்பனை செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு துணை போன காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத மது விற்பனை குறித்து விடியோ ஆதாரத்துடன் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்த கூலித் தொழிலாளி ஒருவர் இறந்துவிட, அவரது இறுதிச் சடங்கில் சுமார் 500 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் விற்பனையான கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளனர்.
இதனால், ஒரே நாளில் இத்தனை பேரும் கள்ளச்சாராயத்துக்கு பலியாகியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறுதிச் சடங்கு முடிந்து வீடு திரும்பியவர்களுக்கு பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சிலர் மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளனர். அதிகாலையிலேயே சிலர் வீட்டிலும் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 120 பேர் வாந்தி, மயக்கம், தலைவலி,நெஞ்சுவலி, கண்பார்வை தெரியாமல் போனது என பல்வேறு பிரச்னைகளுடன் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.