300 ஆன்லைன் சூதாட்ட தளங்கள் முடக்கம்!
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளங்கள் முடக்கம் பற்றி...
300 சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளங்கள் மற்றும் செயலிகளை மத்திய அரசு இன்று முடக்கியுள்ளது.
மத்திய அரசு இதுவரை 8,400 சூதாட்ட இணையதளங்களை முடக்கியுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டப் பின்னர் மட்டுமே இதுவரை 4,900 இணையதளங்கள் தடை செய்து நீக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று மேலும் 300 ஆன்லைன் சூதாட்டத் தளங்கள் மற்றும் செயலிகள் முடக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் ஆன்லைன் விளையாட்டு பெட்டிங் தளங்கள், கேசினோ தளங்கள், லாட்டரி தளங்கள் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன.
இந்தாண்டு தொடக்கத்தில் மட்டுமே 242 சட்டவிரோத சூதாட்ட இணையதளங்களை மத்திய அரசு முடக்கிய நிலையில் இன்று மட்டும் 300 தளங்களை முடக்கியுள்ளது.
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளங்களால் ஏற்படும் நிதி அபாயம் மற்றும் சமூகரீதியான குற்றங்களைத் தடுக்கவும், குறிப்பாக இளைஞர்களை பாதுகாக்கவும் அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இணையவழி விளையாட்டுகளை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா 2025, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலின் பேரில் நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தின் மூலம் சட்டவிரோத இணைய சூதாட்டங்களில் மக்கள் பாதிப்பது தடுக்கப்படுவது மட்டுமின்றி, வேறு வகையான இணைய விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையாக அமைந்தது.
மேலும், சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டுகள் விரைவாக பணம் ஈட்டலாம் என்ற வாக்குறுதிகளை அளித்து விளையாடுபவரை அடிமைப்படுத்தி, நிதி நெருக்கடியில் தள்ளி, சமூக சிக்கல்களுக்கு ஆளாக்கும் சூழலில் மக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
குடும்பங்களை பாதுகாக்க அரசு மேற்கொண்டுள்ள உறுதியான நடவடிக்கையாக இது பார்க்கப்படும் நிலையில், டிஜிட்டல் பொருளாதாரத்தை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தவும் வழிநடத்துகிறது.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான பிரச்னைகள் உலகளவில் தீவிரமானதாகியுள்ளது. இத்தகைய விளையாட்டுகளுக்கு அடிமையாவது சர்வதேச அளவில் ஒரு நோய்மையாக உருவெடுத்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்றது.