முகப்பு
தமிழ்நாடு

சாதிவாரி கணக்கெடுப்பு: உடனடியாகத் தொடங்க பிரதமருக்கு கோரிக்கை!

சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்.

Updated On : 26 ஜூன், 2024 at 2:54 PM
பிரதமர் நரேந்திர மோடி / மு.க. ஸ்டாலின்
பகிர்:

சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சாதி அடிப்படையிலான சமூக, பொருளாதார கணக்கெடுப்பு தரவு பொதுமக்களிடம் இருக்க வேண்டியது அவசியம் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியும், தாம் இதுகுறித்து ஏற்கெனவே 2023 அக்டோபர் 20ஆம் தேதி கடிதம் எழுதியிருந்ததை குறிப்பிட்டு, அதில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புடன் பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை

ஒருங்கிணைத்து மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது, பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் சாதிவாரியான மற்றும் பழங்குடி வாரியான தரவுகள் மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம், 1948-இன் கீழ் கணக்கிடப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும், குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களைச் சென்றடைய வேண்டும்.

பின்தங்கிய மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கொள்கைகளை வகுப்பதற்கும், மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் எப்போதும் அடிப்படையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையிலிருந்து பெறப்பட்ட சரிபார்க்கக்கூடிய சமூகப் பொருளாதார குறியீடுகளின் அடிப்படையில் சட்டங்கள் இயற்றப்படும்போது, அவை சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் தன்மையைப் பெறும்.

மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் உள்ள பல்வேறு சாதிகள், சமூகங்கள் மற்றும் பழங்குடியினரின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி நிலை தொடர்பான அளவிடக்கூடிய தரவுகளின் தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என மத்திய அரசை தாம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதுடன், இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →