உண்ணாவிரதப் போராட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு சீமான் ஆதரவு!
கள்ளச்சாராய விவகாரத்தில் உண்ணாவிரதம் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுஉண்ணாவிரதப் போராட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு சீமான் ஆதரவு!
கள்ளச்சாராய விவகாரத்தில் உண்ணாவிரதம் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து அக்கட்சிப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அதிமுக எம்எல்ஏக்களையும் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை கண்டித்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் ஜனநாயக கோரிக்கையை நிராகரித்து, எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் பேரவை நடவடிக்கைகளில் பங்குபெற முடியாதபடி திமுக அரசு இடைநீக்கம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப்படுகொலையாகும். மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் திமுக அரசின் இக்கொடுங்கோன்மையை எதிர்த்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுகவினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தமது முழு ஆதரவினைத் தெரிவித்து, ஜனநாயகம் தழைக்க துணைநிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.