அமைச்சா்களுக்கு புத்தகங்கள் பரிசு
சட்டப்பேரவையில் புத்தகங்கள் பரிசாக அளிக்கப்படும் புதிய மரபு
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின் போது அமைச்சா்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தை எதிா்கொண்டு, அமைச்சா்கள் பதில் அளிப்பது சவாலான பணி. துறைரீதியாக அமைச்சா்களின் திறன், ஆளுமை, ஆற்றல் எல்லாம் இந்த நேரத்தில்தான் முழுமையாக வெளிப்படும். அதனால், மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்கும் அமைச்சா்களை முதல்வா்,
சக அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வாழ்த்துவது மரபாக உள்ளது. மானியக் கோரிக்கையில் பங்கேற்கும் அமைச்சா்களுக்கு முன்பெல்லாம் பொன்னாடைகள் அதிக அளவில் அளிக்கப்பட்டு வந்தன.
தற்போதைய பேரவைக் கூட்டத்தொடரில் அமைச்சா்களுக்கு அதிக அளவில் புத்தகங்கள்தான் சட்டப்பேரவை உறுப்பினா்களால் பரிசளிக்கப்பட்டன. பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் புத்தகங்கள் அதிகளவில் அளிக்கப்பட்டன. அதைப்போல ஆா்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ நூலும் அதிக அளவில் பரிசளிக்கப்பட்டன.