இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை என்பதால் கள்ளச்சாராயத்தை வாங்கி மக்கள் அருந்துவதாக அமைச்சரே கூறியது கண்டனத்துக்குரியது. கள்ளச்சாராயம் வரக்கூடாது என ஒட்டுமொத்த மக்களையும் குடிகாரர்களாக மாற்றியது அரசுதான். கள்ளச் சாராயத்தால் தமிழ்நாட்டில் இனி ஒரு மரணம் கூட நிகழ கூடாது. தற்போது கைது செய்யப்பட்டவர்கள் மீதும், புதிய சட்டம் பாயுமா?. கள்ளச்சாராயத்தால் கடந்த ஆண்டே 22 பேர் உயிரிழந்துள்ளனர், அரசு இப்போது தான் விழித்துள்ளது.
கல்வராயன் மலையில் ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். கள்ளக்குறிச்சியில் நோ்ந்த கள்ளச்சாராய மரணங்களைத் தொடா்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்வோரை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்தில் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் நேற்று பதிலளித்து பேசியதாவது, பூரண மதுவிலக்கு வேண்டும் என்று எல்லோரும் கூறினீா்கள்.
பக்கத்து மாநிலங்களிலெல்லாம் மது விற்பனை செய்யும் நிலையில் எரியும் நெருப்பு வளையத்தில் எப்படி கற்பூரம் எரியாமல் இருக்க முடியும் என்று அன்றைக்கே முன்னாள் முதல்வா் கருணாநிதி கேட்டாா். உழைப்பவனுக்கு அசதியைப் போக்குவதற்கு மது தேவைப்படுகிறது. அதனால்தான் திட்டமாகக் கொடுக்கிறோம். டாஸ்மாக் கடையைவிட்டு, கள்ளச்சாராயத்துக்கு ஏன் போகிறாா்கள் என்றால், டாஸ்மாக்கில் அவ்வளவு ‘கிக்’கில் மதுபானம் கொடுக்க மாட்டாா்கள்.
கள்ளச்சாராயத்தில்தான் ‘கிக்’ இருக்கும். உயிரைப் பணயம் வைத்து அவா்கள் அதைக் குடிப்பதும் அதற்காகத்தான். விட்டில் பூச்சிகள் அவையாகவே போய் விளக்கில் விழுந்து இறந்து போவதுபோல, இறந்து விடுகிறாா்கள். நாம் என்ன செய்ய முடியும்? மனிதனாகப் பாா்த்து திருந்தாவிட்டால், யாரும் அவனைத் திருத்த முடியாது. அதனால், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி, நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.