’கலைஞர் உலகம்' அருங்காட்சியகத்தை பார்வையிட இன்றுமுதல் அனுமதி!
‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியத்தை பார்வையிட இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 26-ஆம் தேதி திறந்துவைத்தார்.
அந்நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் நிலவறையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு அரங்கங்களுடன் “கலைஞர் உலகம்” என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில், கருணாநிதியின் நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த அருங்காட்சியத்தை காண இன்றுமுதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அருங்காட்சியகத்தினைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து நுழைவுச் சீட்டு பெறுவது அவசியம்.
ஒருவர் ஒரு அலைபேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ள இயலும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். அக்காட்சியினைக் காண வரும் பொதுமக்கள், காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகைபுரிய வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும்.