ஜன நாயகன் எப்போது? தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்த மறுதணிக்கை குழு!
ஜன நாயகன் படத்தை தேர்தல் ஆணையம் பார்வையிட பரிந்துரைக்கப்பட்டிருப்பது பற்றி...
ஜன நாயகன் திரைப்படத்தை மறுதணிக்கை செய்த சென்சார் குழுவினர், இந்திய தேர்தல் ஆணையம் பார்வையிட பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தணிக்கைச் சான்று கோரி சென்னை உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை படக்குழுவினர் முயற்சி செய்தனர். ஆனால், இறுதியில் தணிக்கை வாரியத்துக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்தது.
இதனைத் தொடர்ந்து வழக்கை திரும்பப் பெற்ற படக்குழுவினர், தணிக்கை வாரியம் ஆட்சேபனை தெரிவித்த காட்சிகளை நீக்கிவிட்டு, மறுதணிக்கைக்கு படத்தை அனுப்பினர்.
ஜன நாயகன் திரைப்படத்தை மார்ச் 9 ஆம் தேதி மறுதணிக்கை குழுவினர் பார்வையிட இருந்த நிலையில், குழு உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மும்பையில் செவ்வாய்க்கிழமை மறுதணிக்கை குழுவினர் ஜன நாயகன் திரைப்படத்தை பார்த்து முடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு, கேரளம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல்களில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவிருக்கும் நிலையில், படத்தில் அரசியல் சார்ந்த கருத்துகள் இருப்பதால் தேர்தல் ஆணையம் பார்வையிட மறுதணிக்கை குழு பரிந்துரைத்துள்ளது.
தற்போது ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு இந்திய தேர்தல் ஆணையத்தின் கைகளில் உள்ளது. இந்த படத்தை பார்த்துவிட்டு தேர்தல் ஆணையம் ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்தால் மட்டுமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலகட்டத்தில் படத்தை வெளியிட முடியும்.
ஆனால், படத்தில் அரசியல் சார்ந்த வசனங்கள் இருக்கும் நிலையில், தேர்தலுக்கு பிறகே ஜன நாயகன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.