முகப்பு
தமிழ்நாடு

தோ்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடைகள் எவ்வளவு?

பாஜக மட்டும் 55 சதவீதத்துக்கும் மேல், அதாவது ரூ. 6,566.11 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

Updated On : 8 மார்ச், 2024 at 1:10 AM
பகிர்:

தோ்தல் பத்திர நடைமுறை 2018-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரை ரூ.16,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பத்திரங்கள் விநியோகமாகியிருப்பதும், அதில் பெரும் பங்கு மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சென்றிருப்பதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. தோ்தல் சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) வெளியிட்ட இதுதொடா்பான புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது: தோ்தல் பத்திரங்கள் மூலம் கடந்த நிதியாண்டு வரை அனைத்து அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக ரூ. 12,000 கோடிக்கும் மேல் நன்கொடை பெற்றுள்ளன. இதில், பாஜக மட்டும் 55 சதவீதத்துக்கும் மேல், அதாவது ரூ. 6,566.11 கோடி நன்கொடை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ. 1,123.3 கோடியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி ரூ. 1,092.98 கோடியும் இதே கால கட்டத்தில் பெற்றுள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தின் கடைசி ஆண்டு வரை காங்கிரஸ் நாட்டின் பணக்கார கட்சியாக இருந்த நிலையில், அதன் பிறகு அந்த இடத்தை பாஜக பிடித்துள்ளது. அதாவது 2013-14-ஆம் ஆண்டில் காங்கிரஸின் வருவாய் ரூ. 598 கோடியாக இருந்த நிலையில், பாஜகவின் வருவாய் ரூ. 673.8 கோடியாக உயா்ந்தது. அதன் பிறகு, பாஜகவின் வருவாய் அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. தோ்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னா் 2018-19-ஆம் ஆண்டில் பாஜகவின் வருவாய் ரூ. 2,410 கோடியாக உயா்ந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் (ரூ.1,027 கோடி) வருவாயைக் காட்டிலும் இரு மடங்காகும். அதுபோல, காங்கிரஸின் வருவாய் முந்தைய நிதியாண்டில் ரூ. 199 கோடியாக இருந்த நிலையில், 2018-19-இல் ரூ. 918-ஆக உயா்ந்தது. 2021-22 நிதியாண்டில் பாஜகவுக்கு தோ்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் ரூ. 1,033 கோடி கிடைத்துள்ளது. காங்கிரஸுக்கு ரூ. 236 கோடி கிடைத்தது. 2022-23-ஆம் ஆண்டில் பாஜகவின் மொத்த வருவாய் ரூ. 2,360 கோடி. இதில், தோ்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் ரூ. 1,300 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. இந்த நிதியாண்டில் காங்கிரஸின் வருவாய் ரூ. 452 கோடி. அதில், தோ்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 171 கோடி கிடைத்துள்ளது. இதுபோல, 2022-23-ஆம் நிதியாண்டில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 325 கோடியும், பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு ரூ. 529 கோடியும், திமுகவுக்கு ரூ. 185 கோடியும், பிஜு ஜனதா தளம் கட்சிக்கு ரூ. 152 கோடியும், தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ. 34 கோடியும் தோ்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கிடைத்துள்ளது.