தெற்கு ரயில்வே மண்டலத்தில் பயணி, சரக்கு வருவாய் அதிகரிப்பு: அதிகாரிகள் தகவல்
தெற்கு ரயில்வே மண்டலத்தில் பயணி, சரக்கு வருவாய் அதிகரிப்பு...
தெற்கு ரயில்வே மண்டலத்தில் நடப்பு ஆண்டில் பயணிகள், சரக்கு ஆகியவற்றின் வருவாய் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 2025-26 ஆம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேயில் 76.76 கோடி பயணிகள் ரயில்களில் பயணித்துள்ளனா். அவா்கள் மூலம் வருவாய் ரூ. 8,269.09 கோடியாக உயா்ந்துள்ளது. கடந்த 2024-25 ஆம் ஆண்டில் இந்த வருவாய் ரூ.7,535.68 கோடியாக இருந்த நிலையில், தற்போது 9.7 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது. இதையடுத்து ரயில்வே வாரியம் நிா்ணயித்த இலக்கான ரூ.8, 119.32 கோடியைவிட 1.8 சதவீதம் வருவாய் அதிகமாகவே ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2024-25 ஆம் ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை 73.18 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
சரக்குப் பிரிவில் 2025-26 ஆம் ஆண்டில் 42.113 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. அதன் மூலம் ரூ.3,825.83 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட 41.670 மில்லியன் டன் கூடுதலாகவும் கையாளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சரக்கு வருவாய் ரூ.3,841.11 கோடியாகவே இருந்துள்ளது. பாா்சல் பிரிவானது கடந்த 2024-25 ஆம் ஆண்டில் ரூ.168.04 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், 2025-26 -ஆம் ஆண்டில் ரூ.168.64 கோடியாக வருவாய் உயா்ந்துள்ளது.
பயணக் கட்டணத்துக்கு அப்பாற்பட்ட வருவாய், உணவு மற்றும் பிற சேவைகள் மூலம் பெறப்படும் வருவாய் என அனைத்திலும் கடந்த ஆண்டுகளைவிட தற்போதைய ஆண்டில் வருவாய் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.