ரூ.281 கோடியில் புதிய குடியிருப்புகள்: முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா்
தமிழகத்தில் ரூ.281 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட அரசுக் குடியிருப்புகளை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டம் மஞ்சள்மேடு, புதுக்கோட்டை பொன்னமராவதி, அறந்தாங்கி, தேனி மாவட்டம் மீனாட்சிபுரம், தஞ்சாவூா் மாவட்டம் மகாராஜசமுத்திரம் ஆகிய இடங்களில் ரூ.172.72 கோடியில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதேபோன்று, சென்னை மாவட்டம் ஜாபா்கான்பேட்டை, மதுரை மாவட்டம் தல்லாகுளம் ஆகிய இடங்களில் ரூ.108.62 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.