தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.
நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அந்த சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து அதற்கான நிதியை நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த மாதம் ரூபாய் ஒரு கோடி வழங்கினார். தற்போது அவரைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் நிதியுதவி இன்று வழங்கியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை தனது அலுவலகத்தில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான பொதுச்செயலர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரிடம், நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான சாசோலையை நடிகர் கமல்ஹாசன் வழங்கினார்.