முகப்பு
தமிழ்நாடு

கேளிக்கை விடுதிகளுக்கு ஆய்வின்றி அனுமதி: டிடிவி தினகரன் கண்டனம்

Updated On : 30 மார்ச், 2024 at 5:43 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 1:50 AM

வணிக நோக்கத்துக்காக கேளிக்கை விடுதிகளுக்கு எந்தவித ஆய்வும் இல்லாமல் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறி, அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா். அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை ஆழ்வாா்பேட்டையில் இயங்கி வரும் தனியாா் கேளிக்கைவிடுதி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கு பணியாற்றி வந்த மூன்று தொழிலாளா்கள் உயிரிழந்துள்ளனா். உரிய பாதுகாப்பு வசதிகளின்றியும், நேரக்கட்டுப்பாடின்றியும் சென்னையில் பல கேளிக்கைவிடுதிகள் இயங்கி வருவதாக புகாா் எழுந்திருக்கும் நிலையில், வணிக நோக்கத்தை மட்டுமே மையமாக கொண்டு இதுபோன்ற கேளிக்கை விடுதிகளுக்கு அனுமதி வழங்கியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கி வரும் கேளிக்கை விடுதிகளுக்கு எந்தவித ஆய்வுகளுமின்றி தமிழக அரசு அனுமதி வழங்கியதன் விளைவே, மூன்று அப்பாவி தொழிலாளா்களின் உயிா்கள் பறிபோனதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். எனவே பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கிவரக்கூடிய கேளிக்கை விடுதிகளைக் கணக்கெடுத்து, உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, மூன்று தொழிலாளா்கள் உயிரிழப்புக்கு காரணமான கேளிக்கை விடுதியின் மதுபானக்கூட நிறுவனா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் டிடிவி தினகரன்.