முகப்பு
தமிழ்நாடு

சுட்டெரிக்கும் வெயில்: திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு

Updated On : 14 மே, 2024 at 7:19 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை: தமிழகத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் எவ்வகையான திறந்தவெளி கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னையிலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சில இடங்களில் மழை பெய்தாலும், வெப்பத்தின் தாக்கம் குறையாமலே இருந்து வருகிறது. இதனால், பெரும்பாலும் திறந்தவெளியில் கட்டுமானப் பணி மேற்கொள்ளும் தொழிலாளா்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

ஏற்கெனவே வெப்பத்தின் தாக்கத்தால் தொழிலாளா்கள் பலா் பாதிப்புக்குள்ளான நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் காலை 10 முதல் மாலை 4 மணிவரை எவ்வகையான திறந்தவெளி கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளா்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மே மாதம் இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் எனவும் அந்த உத்தரவில் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கட்டடத் தொழிலாளா்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.