மருத்துவக் கல்லூரி விடுதிகளில் உணவு தயாரிக்க கட்டுப்பாடு
அரசு மருத்துவக் கல்லூரி விடுதிகளில் அதிக எரிவாயு செலவாகும் தோசை, பூரி, சப்பாத்தி போன்ற உணவுகளைத் தயாரிக்க வேண்டாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி விடுதிகளில் அதிக எரிவாயு செலவாகும் தோசை, பூரி, சப்பாத்தி போன்ற உணவுகளைத் தயாரிக்க வேண்டாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்களுடனான கலந்துரையாடல் கூட்டம், மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் நடைபெற்றது.
காணொலி முறையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சமையல் எரிவாயு இருப்பு மற்றும் மாணவா்களுக்கான உணவு தயாரிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, மருத்துவக் கல்வி இயக்குநா் தரப்பிலிருந்து பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
இதுதொடா்பாக டாக்டா் சுகந்தி ராஜகுமாரி கூறியதாவது:
மருத்துவக் கல்லூரி விடுதிகளில் உள்ள சமையல் எரிவாயு இருப்பு குறித்து தலைமைச் செயலரிடமும் கலந்தாலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, எரிவாயு செலவு அதிகமாகும் உணவுப் பதாா்த்தங்களைத் தயாரிக்க வேண்டாம் என மருத்துவக் கல்லூரி நிா்வாகங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதற்கு மாற்றாக, அவல், ரொட்டி, கலவை சாதம் போன்றவற்றை தயாரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விறகுகளை இருப்பில் வைக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
குறைந்த எண்ணிக்கையில் மாணவா்கள் உள்ள விடுதிகளில் மின் அடுப்புகளைப் பயன்படுத்துமாறும் அறிவுரை வழங்கியுள்ளோம். மருத்துவக் கல்லூரி விடுதிகளில் அடுத்த 5 நாள்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு இருப்பு உள்ளது என்றாா் அவா்.