அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!
தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜூன் 27-க்கு ஒத்திவைப்பு.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கின் விசாரணை ஜூன் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக மத்திய சென்னை தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பேசிய இபிஎஸ், தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 75 சதவிகித பணத்தை செலவு செய்யவே இல்லை எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனை மறுத்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 95 சதவிதத்துக்கு மேல் செலவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமி வருகை தந்த நிலையில், அதிமுக தொண்டர்கள் அதிகளவில் குவிந்ததால், காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.