செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!
அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் வேறு வழக்கில் ஆஜரானதால் இந்த வழக்கு ஒத்திவைப்பு.
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்ட வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் வழங்கக் கோரியும் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 10-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறு வழக்கில் ஆஜரானதால் இந்த வழக்கை ஒத்திவைக்க அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜால் புய்யான் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்த மே 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறையின் தரப்பில், இந்த விவகாரத்தில் விரிவான வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணை மே 15-க்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
Advertisement
இதையடுத்து புதன்கிழமை விசாரணையின்போது அமலாக்கத்துறையின் சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் வேறொரு வழக்கில் ஆஜரானதால் இந்த வழக்கு விசாரணை இன்று ஒத்திவைத்தது. ஆனால், சொலிசிட்டர் இன்றும் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த வழக்கை ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
இந்த வழக்கை நாளை விசாரிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அமலாக்கத்துறை தரப்பு வாதங்களைக் கேட்காமல் வழக்கை விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.