புதுச்சேரியில் டெங்கு பாதித்து சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் பலி!
புதுச்சேரியில் டெங்கு பாதித்து சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் பலியானார்.
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.
தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விந்தியா (வயது 22). இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை மூலகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், டெங்கு பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர்.
Advertisement
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விந்தியா பரிதாபமாக பலியானார்.
விந்தியாவிற்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் மதிப்பில் மருந்துகள் செலவு செய்யப்பட்டு இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்து இருந்தனர்.
இளம்பெண் பலியானதால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் எவ்வாறு இது போல் நடந்தது என்று காரணம் கேட்டதற்கு மருத்துவர்கள் சரியான முறையில் பதில் கூறாததன் காரணமாகவும், மேற்கொண்டும் ரூபாய் 58 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என்றும், முழு தொகையை செலுத்தினால்தான் உடலைத் தருவதாக மருத்துவமனை தெரிவித்ததாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையின் முன் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.