முகப்பு
தமிழ்நாடு

கிண்டி மருத்துவமனையில் இளைஞர் பலி! மருத்துவர்கள் இல்லை எனக் குற்றச்சாட்டு!

கிண்டி மருத்துவமனையில் இளைஞர் பலியானது பற்றி...

Updated On : 15 நவம்பர், 2024 at 7:33 AM
பகிர்:

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

மருத்துவர்கள் போராட்டத்தால் சரியான சிகிச்சை கிடைக்காததால்தான் உயிரிழப்பு நேரிட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

கிண்டி மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் புதன்கிழமை கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Advertisement

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டனர். எனினும், அவசர சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பெரும்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்(வயது 30), பித்தப்பை கல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நிலையில், பணம் செலுத்த முடியாத காரணத்தால் புதன்கிழமை இரவு கலைஞர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் பரிசோதித்த மருத்துவர்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றியுள்ளனர். அங்கு விக்னேஷின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, மீண்டும் வியாழக்கிழமை இரவு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆனால், சிகிச்சைப் பலனளிகாமல் இன்று காலை விக்னேஷ் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மருத்துவமனைக்கு வந்த விக்னேஷை முறையாக பரிசோதிக்காமல் பொதுப் பிரிவுக்கு மாற்றியதே அவரின் உயிரிழப்புக்கு காரணம் என்று உறவினர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

மேலும், இன்று காலை விக்னேஷின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கலைஞர் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த விக்னேஷுக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் உறவினர் பேட்டி

செய்தியாளர்களிடம் விக்னேஷின் உறவினர் கூறியதாவது:

“அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நேரம் முதல் அவருக்கு உரிய சிகிச்சை மருத்துவர்கள் அளிக்கவில்லை. இதுகுறித்து செவிலியர்களிடம் விளக்கம் கேட்ட பொழுது, மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்றும், அவர் நன்றாகத்தான் இருக்கிறார் என்று செவிலியர் அலட்சியத்தோடு பதில் அளித்தனர்.

நேற்று காலை உடல் நலம் மிகவும் மோசமடைந்த நிலையில் கூட, அவருக்கு மருத்துவம் பார்க்க எந்த மருத்துவரும் வராததால், மீண்டும் செவிலியர்களிடம் முறையிட்டோம். நேற்று முழுவதும் மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை, வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கிறார்கள், இந்த வேலை நிறுத்தம் எப்பொழுது முடியும் என்று தெரியவில்லை என செவிலியர் ஒருவர் அலட்சியமாக பதில் அளித்தார்.

நேற்று இரவு 12 மணி அளவில்கூட அவசர சிகிச்சை பிரிவில் எந்த மருத்துவரும், விக்னேஷுக்கு மருத்துவம் பார்க்கவில்லை. வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விடுகிறோம் என்று அவரது மனைவி பரிமளா செவிலியர் இடம் முறையிட்டார். அதற்கு டிஸ்சார்ஜ் செய்வதற்கு எனக்கு எந்த அதிகாரமும் இல்லை என செவிலியர் கூறினர். காலையில் எந்தவித சிகிச்சையும் இல்லாமல் விக்னேஷ் இறந்து விட்டார்” எனத் தெரிவித்தார்.

மருத்துவமனை விளக்கம்

விக்னேஷின் உயிரிழப்பு குறித்து கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

“உயிரிழந்த விக்னேஷ் அனுமதிக்கப்பட்ட நாளில், அனைத்து மருத்துவர்களும் பணியில் இருந்தனர். அவர் ஏற்கெனவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பிறகுதான் நோயின் தீவிரத் தன்மையுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

குடல் நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு அவசர பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

முறையான அனைத்து சிகிச்சையும் அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் உயிரிழந்துவிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments