மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, பெங்களுர், ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட முக்கிய இந்திய நகரங்களுக்கும், இலங்கை, சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா ஆகிய நாடுகளுக்கும் விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மேலும் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு தேவையான 633.17 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, நிலம் கையகப்படுத்துவதற்கும் இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களை வெளியேற்ற தடை விதிக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதில், மக்களை அவர்களுடைய சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்குமென்றும், அதுவரை அதிகாரிகள் மக்களை வெளியேற்றும் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாதென உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இந்த வழக்கின் மீதான அடுத்த விசாரணையை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.