மது ஒழிப்பு மாநாட்டில் உள்நோக்கம் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (அக். 2) விளக்கம் அளித்தார்.
மது ஒழிப்பு என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் மது ஒழிப்பு மாநாட்டை விசிக நடத்தியதாகவும் அவர் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு இன்று (அக். 2) நடைபெற்றது.
இதில், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தேசிய துணைத் தலைவர் உ.வாசுகி மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
இதில் மது மற்றும் போதைப் பொருள்களைத் தடுக்கும் வகையில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
படிக்க | மது ஒழிப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள்! விசிக மது ஒழிப்பு மாநாட்டில் 12 தீர்மானங்கள்!
மாநாட்டில் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். இதில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது,
மாநாட்டில் அரசியல் இல்லை - மது ஒழிப்பு மட்டுமே!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மது ஒழிப்பு மாநாடு தாக்கத்தை ஏற்படுத்தும்.
மது அருந்தக் கூடாது வடலூர் வள்ளலாரும், அய்யா வைகுண்டரும் வலியுறுத்தினர்.
மதுவுக்கு அடிமையாகியிருந்தால் பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள்.
சாதி பற்றி பேசாதவகள் நாங்கள். புத்தர், அம்பேத்கர் வழியில் வந்தவர்கள்.
புத்தரோ, இயேசுவோ, இஸ்லாமோ அல்லது மகான்களோ மதுவை ஒருபோதும் ஆதரிக்கவில்லை
மாமனிதர்களின் கொள்கையை உள்வாங்கியவன்; ஞான வம்சத்தில் வந்ததால் மதுவிலக்கு பற்றிப் பேசுகிறேன்.
மதுவை தொடாமல் ஒரு மதம் பின்பற்றி வருகிறது என்றால் அது இஸ்லாமிய மதம்தான்.
மது ஒழிப்பு என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் மாநாடு நடத்தியது விடுதலைச் சிறுத்தைகள்தான்.
திடீரென மதுவிலக்கு பற்றி பேசவில்லை. மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் உள்நோக்கம் இல்லை.
மதுவிலக்கில் திமுகவுக்கு உடன்பாடு
கிராமப்புறங்களில் பல்வேறு வடிவங்களில் போதைப் பொருள் புழக்கத்தில் உள்ளது. இளம் வயதில் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் மனிதவளம் பாழாகிறது.
மதுவிலக்கில் திமுகவுக்கும் கொள்கை அளவில் உடன்பாடு உள்ளது.
தேசிய மதுவிலக்குக் கொள்கை மூலம் நாடு முழுவதும் மது விலக்கு வேண்டும் என மத்திய அரசிடமும், மாநிலத்தில் மது விலக்கு வேண்டும் என தமிழக அரசிடமும் கோரிக்கை வைக்கிறோம்.
தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்றார் கலைஞர் கருணாநிதி. மதுக்கடைகளை மூட முடியாது என மு.க. ஸ்டாலின் கூறவில்லை. நிர்வாகரீதியில் சிக்கல் இருப்பதாகவே கூறினார்.
படிக்க | ந'மது' அரசுகளும் 45 ஆயிரம் கோடி ரூபாயும்!
திமுகவை நிறுவிய அண்ணா, மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தார்.
காந்தியடிகளின் பல கொள்கைகளில் முரண்பட்டாலும், மது ஒழிப்பில் உடன்படுகிறோம். அரசுக்கு மதம் கூடாது என்பதை வலியுறுத்தியவர் காந்தியடிகள்.
சாதி, மத வெறியில் இருந்து இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என திருமாவளவன் உரையாற்றினார்.
மதுவால் இந்துக்கள் அதிகம் பாதிப்பு
மது ஒழிப்பு மாநாட்டிற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தேன். இதற்கு அரசியல் சாயம் பூசிவிட்டனர். மது ஒழிப்பு மாநாட்டின் உயர்ந்த நோக்கத்தை சிதைத்துவிட்டனர்.
மதுவுக்கு எதிரான போரை பெண்களே முன்னெடுக்க வேண்டும். மதுப்பழக்கத்தால் இந்துக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்துக்கள் மீது அக்கறை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தேசிய அளவில் மது ஒழிப்புக் கொள்கையை உருவாக்க வேண்டும்.
9 சோதனைச் சாவடிகளைத் தாண்டி கள்ளக்குறிச்சிக்கு கள்ளச்சாராயம் வந்தது எப்படி?
பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் அதிகம் மதுவால் பாதிக்கப்படுவதால் மது ஒழிப்பு மாநாட்டை விசிக நடத்துவதாக சிலர் கீழ்த்தரமாகப் பேசுகின்றனர். இது அனைத்து மக்களுக்குமானது.
பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பலதரப்பட்ட ஏழை மக்களின் குடும்பம் மதுவால் சீரழிகிறது என திருமாவளவன் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.