முகப்பு
தமிழ்நாடு

புலவர் த. சுந்தரராசன் காலமானார்

தலைநகர் தமிழ்ச் சங்க நிறுவனர் புலவர் த. சுந்தரராசன் இயற்கை எய்தினார்

Updated On : 12 அக்டோபர், 2024 at 9:29 AM
புலவர் த. சுந்தரராசன்
பகிர்:

தலைநகர் தமிழ்ச் சங்க நிறுவனர் புலவர் த. சுந்தரராசன் (74) இன்று காலை நாகர்கோயிலில் காலமானார்.

சென்னையில் தலைநகர்த் தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பை நிறுவி ஐம்பது ஆண்டுகளாக நடத்தி வந்தவர் புலவர் த. சுந்தரராசன்.

சென்னை மாநகராட்சிப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிப் பணிநிறைவு பெற்ற புலவர் சுந்தரராசன் (வயது 74), அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அடைகாய்ச்சுவிளையில் உடல்நலமில்லாமல் இருந்தார்.

தலையில் ஏற்பட்ட கட்டியை சரிசெய்வதற்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (அக். 11) இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்த அறுவை சிகிச்சை பயனளிக்காததால் இன்று (அக்.12) காலை 8.20 மணியளவில் சுந்தரராசன் காலமானார்.

தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து பல கருத்தரங்கங்களையும் போராட்டங்களையும் நடத்தினார். செம்மொழியாக்க வேண்டும் என்பதற்காக சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், புதுதில்லி முதலான பகுதிகளில் தொடர்ந்து கருத்தரங்கங்கள் நடத்தி மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தார். செம்மொழி வரலாற்றில் அவரையும் தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தையும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து பல கருத்தரங்கங்களை நடத்தி வந்தார். சென்னையில் வண்டலூரில் தலைநகர்த் தமிழ்ச் சங்கத்திற்காக ஒரு கட்டடத்தை அமைத்து அதன் முன்னால் திருவள்ளுவர் சிலையையும் நிறுவியுள்ளார். அந்தத் திருவள்ளுவர் சிலையைப் பெங்களூர் தமிழ்ச் சங்கம் அன்பளிப்பாக வழங்கியது.

தமிழ் மொழிக்காகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த புலவர் த. சுந்தரராசன் இன்று (12-10-2024) தன் போராட்ட வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவரது மறைவு தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் மாபெரும் இழப்பாகும். அவருக்கு மனைவியும் வளன் என்னும் ஒரு மகனும் பேரக் குழந்தைகளும் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →