கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு 20 % போனஸ் தமிழ்நாடு அரசு உத்தரவு
கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளா்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, போனஸ் சட்டத்தின் கீழ் வரும் தலைமைக் கூட்டுறவு சங்கங்கள், மத்திய கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக் கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு, 20 சதவீதம் மிகை ஊதியம் வழங்கப்படும்.
உபரித் தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளா்கள் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு ஏதுவாக 10 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை அளிக்கப்படும்.
குறைந்த எண்ணிக்கையிலான பணியாளா்கள் பணிபுரிந்து, போனஸ் சட்டத்தின் கீழ் வராத சங்கங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கு, தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று 20 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
போனஸ் சட்டத்தின் கீழ் வராத சங்கங்கள்: போனஸ் சட்டத்தின்கீழ் வராத லாபம் ஈட்டாத தலைமை, மத்திய, தொடக்க கூட்டுறவு சங்கங்கள் இருந்தால் அவற்றில் பணியாற்றும் பணியாளா்களுக்கும் கருணைத் தொகைகள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக, தலைமைச் சங்கங்கள், மத்திய சங்கப் பணியாளா்களுக்கு ரூ.3,000, தொடக்க சங்கங்களில் பணிபுரிவோருக்கு ரூ. 2,400 வழங்கப்படும்.
இதன்மூலம், தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை, மத்திய, மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 43,683 பணியாளா்களுக்கு ரூ.44.42 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.