தவெகவின் முதல் மாநாட்டில் அதிமுகவை விஜய் விமர்சிக்காதது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தவெகவின் மாநாட்டில் நடிகரும் அக்கட்சியின் தலைவருமான விஜய், பாஜக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஆனால், அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளை அவர் விமர்சிக்காதது கூட்டணிக்கான வியூகமாக இருக்கலாம் என்று கருத்துகள் பரவி வந்தன.
இந்த நிலையில், தவெக மாநாட்டில் விஜய்யின் பேச்சு, அக்கட்சியுடன் கூட்டணி வைக்கப்படுமா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.
“தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டை சகோதரர் விஜய் விக்கிரவாண்டியில் நடத்தியுள்ளார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ளன, சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி முடிவெடுக்கப்படும்.
அதிமுக சிறப்பாக செயல்பட்டதால் எங்களை விஜய் விமர்சிக்கவில்லை. அவரது கட்சியின் கருத்துகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கொள்கையே கிடையாது. ஒரே கொள்கையுடைய கட்சிகளாக கூட்டணி அமைத்துள்ளோம் என்று முதல்வர் கூறியுள்ளார். பிறகு ஏன் தனித்தனியாக செயல்பட வேண்டும். அனைவரும் ஒரே கட்சியாக செயல்படலாமே.
திமுகவுக்கும் பாஜகவுக்கு மறைமுக உறவு உள்ளது. தற்போது அனைத்துக் கட்சிகளும் இந்த கருத்தை தெரிவித்து வருகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு முன்கூட்டியே ஊதியம், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.