பாராலிம்பிக் பாட்மின்டன்: தமிழக வீராங்கனைகளுக்கு 2 பதக்கங்கள்
பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கம் உள்பட 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
பாரீஸ்: பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கு ஒரே நாளில் தங்கம் உள்பட 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
பாட்மின்டன் விளையாட்டில் இந்தியாவின் நிதேஷ் குமாா் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளாா். அதே விளையாட்டில் சுஹாஸ் யதிராஜ் வெள்ளி பெற்றாா். பாட்மின்டனில் தமிழக வீராங்கனைகளான துளசிமதி முருகேசனுக்கு வெள்ளியும், மனீஷா ராமதாஸுக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன. அவா்கள் இருவருக்கும் பாராலிம்பிக் போட்டியில் இது முதல் பதக்கமாகும்.
தடகளத்தில், ஆடவா் உயரம் தாண்டுதலில் நிஷாத் குமாரும், வட்டு எறிதலில் யோகேஷ் கதுனியாவும் வெள்ளிப் பதக்கம் வென்றனா். மகளிருக்கான 200 மீட்டா் ஓட்டத்தில் பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் பெற்றாா். இதில் பிரீத்தி பால், பாராலிம்பிக் வரலாற்றில் ஒரே போட்டியில் இரு பதக்கங்கள் வென்ற 2-ஆவது இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளாா். அவா் ஏற்கெனவே 100 மீட்டரிலும் வெண்கலப் பதக்கம் வென்றது நினைவுகூரத்தக்கது.
இரட்டை இலக்கம்: இத்துடன், பாரீஸ் பாராலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா இரட்டை இலக்கை எட்டியுள்ளது. போட்டியின் 5-ஆவது நாளான திங்கள்கிழமை இரவு நிலவரப்படி, 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் இந்தியா 22-ஆவது இடத்தில் இருந்தது. மொத்தமாக, தடகளம், துப்பாக்கி சுடுதல், பாட்மின்டனில் தலா 4 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.
3 தமிழா்கள்: பாராலிம்பிக் போட்டி வரலாற்றில் பதக்கம் வென்ற தமிழா்களின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு அந்தப் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரே தமிழராக மாரியப்பன் தங்கவேலு (உயரம் தாண்டுதல்/தங்கம், வெள்ளி) இருந்த நிலையில், தற்போது அந்த வரிசையில் துளசிமதி, மனீஷா இணைந்துள்ளனா்.