அமெரிக்காவிலிருந்து கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை இந்தியாவிற்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மூலமாக மீட்டுக் கொண்டுவரப்பட்டது. இதன் மதிப்பு 5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால் உள்ளிட்டோர் உலோகசிலையினை நேரில் பார்வையிட்டு இவ்வுலோக சிலையினை மீட்டெடுத்த தமிழ்நாடு சிலைத்திருட்டு தடுப்புப் பிரிவின் தனிப்படையினரின் பணியினை பாராட்டினார்கள்.
தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப்பிரிவின் காவல்துறைத் தலைவர் முனைவர் இ. தினகரன். அவர்களது வழிகாட்டுதலின் படியும் காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. சிவக்குமார் மேற்பார்வையிலும் ஒரு தனிப்படை அமைத்து வெளிநாட்டு தனியார் கலைப்பொருட்கள் சேகரிப்பாளர்களால் நடத்தப்படும் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் இணையதளங்களில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான ஏதேனும் சிலைகள் கடத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து சமூக இணையதளங்களை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தி தனிப்படை அமைக்கப்பட்டது.
இத்தனிப்படையினர் இணைய தளங்களில் தீவிர விசாரணை மேற் கொண்ட போது, 2008ம் வருடம் நவம்பர் மாதம் லூயிஸ் நிக்கல்சன் என்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட கோல்டு ஆஃப் தி காட் என்ற ஒரு கட்டுரையைக் கண்டறிந்தனர்.
அதில் கலியகல்கி என்ற கலியமர்த்தன கிருஷ்ணர் (குழந்தை கிருஷ்ணர் காலிங்கன் எனப்படும் பாம்பின் மேல் நடனமாடும் நிலையில் உள்ள) உலோக சிலையின் புகைப்படத்தினை ... வளைத்தளத்தில் கண்டறிந்தனர்.
பின்னர் பல்வேறு இணையதளங்களில் மேற்காணும் சிலை குறித்த தகவல்களையும் தனிப்படையினர் சேகரிக்கத் தொடங்கினர்.
எப்படி வந்தது?
தொடர் விசாணையில் கலியகல்கி என்ற கலியமர்த்தன கிருஷ்ணரின் உலோக சிலை தற்சமயம் அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை என்ற அமைப்பின் கைவசம் இருப்பதையும் தனிப்படையினர் தெரிந்து கொண்டனர்.
உலோக சிலை குறித்தான தொடர் விசாரணையில் இச்சிலையானது தமிழ்நாட்டின் பிற்காலச் சோழர்காலமான 11-12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது.
தமிழ்நாடு சிலைத்திருட்டு தடுப்புபிரிவினரின் அயராத முயற்சியினாலும் சர்வதேச கூட்டுமுயற்சியினாலும் மேற்காணும் சிலை அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அமைப்பு கைப்பற்றி பாங்காங் அரசிடம் 11.10.2023 ல் ஒப்படைத்தனர். பின்னர் பாங்காங்கில் உள்ள இந்திய உயர் ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு சிலைத்திருட்டு தடுப்புபிரிவினர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்திய உள்துறை அமைச்சகம், இந்திய தொல்லியல்துறை ஆகியோர்களின் இராஜதந்திர முயற்சிகள் மூலம் தாய்லாந்து அரசாங்கத்தினரால் 25.06.2024 ல் இந்திய தொல்லியல்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இறுதியாக கடந்த 04.092024 அன்று தமிழ்நாடு சிலைத்திருட்டு தடுப்புப் பிரிவு தனிக்குழுவினரிடம் இந்திய தொல்லியல் துறை மூலமாக பெறப்பட்டது.
மேற்காணும் சிலையானது. கூடுதல் தலைமை நடுவர் நீதிமன்றம் (சிலைத் திருட்டு சிறப்பு நீதிமன்றம்) கும்பகோணம் வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. மேலும் இந்த சிலை எந்த கோவிலைச் சேர்ந்தது என்பதை கண்டறிந்திட தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.