கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்து விளம்பரம்: ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!
அசைவ உணவருந்தும் கிருஷ்ணர் படம் வெளியிட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் கைது!
மலப்புரம் : கேரளத்தில் கிருஷ்ணர் அசைவ உணவருந்துவதாகச் சித்திரித்துப் படம் வெளியிட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
மலப்புரம் மாவட்டம், வலம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் விளம்பரத்தில் கடவுள் கிருஷ்ணர் திருவுருவப் படத்தில் அவர் அசைவ உணவு வகையைச் சார்ந்த ‘குழி மந்தி’ சாப்பிடுவதைப் போலச் சித்திரிக்கப்பட்டிருந்ததாம். இந்தப் படம் கேரளத்தில் ஆண்டுப்பிறப்பையொட்டி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ‘சித்திரை விஷு’ வாழ்த்துகளுடன் சம்பந்தப்பட்டவர்களின் சமூக வலைதளப் பக்கத்தில் ஏப். 14-இல் வெளியிடப்பட்டது.
இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. பரவலாகக் கண்டனம் எழுந்தத்தைத்தொடர்ந்து, அந்தப் பதிவு கடந்த ஏப். 17-இல் நீக்கப்பட்டுவிட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
இவ்விவகாரம் பரவலாகத் தெரிந்த நிலையில், அதனையடுத்து, சனிக்கிழமை (ஏப். 18) சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அத்துடன், அந்தப் பதிவை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அவர்களுக்கு நெருக்கமான நிர்வாகி மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
இதன்பேரில், ஹோட்டல் உரிமையாளர்களான முஷ்தஃபா குண்டுவாயில் மற்றும் சாஹுல் ஹமீது ஆகிய இருவருடன் சேர்த்து சமூக வலைதள நிர்வாகியான முகமது ஷாஹினும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.