முகப்பு
தமிழ்நாடு

நத்தம் அருகே காதலியை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற காதலன்

நத்தம் அருகே காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 8 செப்டம்பர், 2024 at 11:43 AM
செல்லம்(19)
பகிர்:

நத்தம் அருகே காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே துவராபதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கொட்டாம்பட்டி அருகே உள்ள வெல்லைமலைப்பட்டியைச் சேர்ந்த வீரையா மகன் செல்லம் (வயது 19) என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் துவராபதியில் உள்ள உறவினரின் வீட்டில் இன்று நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்காக வந்த செல்லம், தனது காதலியுடன் சித்தப்பாவான அண்ணாமலை என்பவரின் வீட்டில் வைத்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது செல்லத்திற்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி காதலி காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த செல்லம் அவரது சித்தப்பாவான அண்ணாமலை என்பவரின் வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியால் (AIR GUN) காதலியை சுட்டார். இதில் 17 வயது சிறுமிக்கு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காதலியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை பார்த்த செல்லம் தானும் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் பின்னர் திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் ஊரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார். மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன், காதலியை துப்பாக்கியால் (AIR GUN) சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →