வெற்றிமாறன், ரஞ்சித், மாரி செல்வராஜ் ஜாதியவாதத்தை உயர்த்தி பிடிப்பவர்கள் அல்ல என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய மகாவிஷ்ணு கைது ஏற்கத்தக்கது, மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய விவகாரத்தில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளிகளில் இது போன்ற மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல்கள் இருக்கக்கூடாது. அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லா அரசியல் கட்சிகளுமே மாநாடு தொடங்கும் போது இது போன்ற பிரச்னைகளை சந்திப்பது வழக்கம் தான், நடிகர் விஜய்யின் மாநாடு நடைபெறும். அவரது மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் அக். 2ஆம் தேதி விசிக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது.
நாங்கள் திமுக கூட்டணியோடு தான் உள்ளோம். கூட்டணி தொடர்ந்து கொண்டுள்ளது. 2026 தேர்தலுக்கு இன்னும் ஒன்னரை ஆண்டுகள் உள்ளன. இப்போது அது குறித்த கேள்வி தேவையில்லை.
வெற்றிமாறன், ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் ஜாதிப் பெருமை பேசக்கூடிய படங்களை எடுப்பதில்லை.
ஜாதிய கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கக் கூடிய , விவாதத்துக்கு உள்ளாக்கக்கூடிய கருப்பொருளை மையமாக வைத்துதான் அவர்கள் படங்களை எடுத்து வருகின்றனர்.
அதுதான் இப்போது ஜாதியவாதிகளுக்கு பிரச்னையாக உள்ளதே தவிர, அவர்கள் ஜாதியவாதத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் அல்ல.
புரட்சிகரமான சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற வேட்கை அவர்களிடம் உள்ளது.
அதனால்தான் இந்த படங்களின் வாயிலாக தங்களது உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் ஜாதியப் பாகுபாடுகள் 99 சதவீதம் இன்னும் அப்படியே தான் உள்ளது, ஒரு சதவீதம் தான் நாம் பேசத் தொடங்கி உள்ளோம்.
இந்திய அளவில் இந்த விவாதம் விரிவாக்கம் ஆக வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.