பாடலை சப்தமாக கேட்ட விவகாரம்- கோவையில் இளைஞர் கொலை
பாடலை சப்தமாக வைத்து கேட்டது தொடர்பாக எழுந்த பிரச்னையில் கோவையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடலை சப்தமாக வைத்து கேட்டது தொடர்பாக எழுந்த பிரச்னையில் கோவையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் கெம்பட்டி காலணி பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்கிருஷ்ணன் (24). இவர் செட்டிவீதி பகுதியில் தங்க நகை செய்கின்ற தொழில் செய்து வருகிறார்.
நேற்று முன் தினம் இரவு கோகுல்கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த கோகுலிடம் நாகராஜ், பிரவீன்குமார், சூர்யா, சந்துரு மற்றும் சஞ்சய், ஆகியோர் முன்விரோதம் காரணமாக தகறாரில் ஈடுபட்டதாக தெரிகிறது.
Advertisement
இதில் இருத்தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் நாகராஜ், பிரவீன்குமார், சூர்யா, சந்துரு மற்றும் சஞ்சய் தரப்பினர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் கோகுலை குத்தி விட்டு தப்பி உள்ளனர்.
இதில் கோகுல் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் செல்வபுரம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கோகுலின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலைக்கு காரணமான நாகராஜ், பிரவீன்குமார், சூர்யா, சந்துரு மற்றும் சஞ்சய் ஆகியோரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில நாட்களுக்கு முன்பு கோகுல்கிருஷ்ணனின் உறவினரான தனசேகர் வீடு அருகே வசிக்கும் சிவகுமார் என்பவர் சப்தமாக பாடலை கேட்டதாகவும் இது குறித்து தனசேகர் கேட்டபோது சிவசங்கர், மற்றும் பிரவீன் ஆகியோர் தகராறில் ஈடுபட்டதாகவும் அதில் கோகுல்கிருஷ்ணன் தலையிடவே கோகுல்கிருஷணனையும் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த பிரச்னை அப்போதைக்கு சமரசம் செய்யப்பட்ட நிலையில் இருத்தரப்பினரும் பகையில் இருந்துள்ளனர்.
இந்த சூழலில் நேற்று முன் தினம் இருத்தரப்பினரும் மோதி கொண்ட நிலையில் இக்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதே சமயம் கோகுல்கிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியாமல் நேற்று கோகுல்கிருஷ்ணனின் அண்ணனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.