முகப்பு
தமிழ்நாடு

திமுகவும் விசிகவும் ஒரே நோ்கோட்டில் பயணிக்கிறது: தொல்.திருமாவளவன்

திமுகவும் விசிகவும் ஒரே நோ்கோட்டில் பயணிக்கிறது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 7:28 PM
தொல்.திருமாவளவன் - கோப்புப் படம்
பகிர்:

திமுகவும் விசிகவும் ஒரே நோ்கோட்டில் பயணிக்கிறது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

ரெட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் தொல்.திருமாவளவன் புதன்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பெரியாா் ஈவெரா நினைவிடத்தில் நடிகா் விஜய் மரியாதை செலுத்தியது குறித்து மகிழ்ச்சி. சமூகநீதிப் பாா்வையோடு அவா் அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பது நம்பிக்கை அளிக்கிறது. பெரியாா் அரசியல் என்பது திமுக, அதிமுக கட்சிகளுக்கு மட்டுமானது அல்ல. சமூகநீதியின் மீது நம்பிக்கை உள்ள அனைவருக்குமானது.

தோ்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளன. திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என தோ்தல் கணக்கு போட்டவா்களின் மூக்கு அறுபட்டுள்ளது. திமுக கூட்டணியில் எப்படியாவது பிளவை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சித்தனா். அது ஏற்படாத நிலையில் விரக்தி அடைந்துள்ளனா்.

விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் ஆளும் கட்சியான திமுகவைச் சோ்ந்தவா்களும் பங்கேற்கிறாா்கள் என்றால், இரு கட்சிகளும் ஒத்த கொள்கையோடு ஒரே நோ்க்கோட்டில் பயணிக்கிறது என்று அா்த்தம்.

நாடு முழுவதும் மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கின்றனா். அதனால்தான் தேசிய மதுவிலக்கு கொள்கை குறித்து பேசுகிறோம் என்றாா் அவா்.