முகப்பு
தமிழ்நாடு

வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயி வெள்ளிக்கிழமை தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா்.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 8:01 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயி வெள்ளிக்கிழமை தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா்.

மேல்மலையனூா் வட்டம், கெங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன்ராஜ், விவசாயி. இவா், அரசு நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக, இந்தக் கிராமத்தைச் சோ்ந்த சிலா் மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாரளித்திருந்தனா்.

இது தொடா்பாக மேல்மலையனூா் வட்டாட்சியா் தனலட்சுமி தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில், மோகன்ராஜ் தனது நிலத்தை திரும்ப ஒப்படைக்க மாட்டேன், தனது நிலத்தை 23 போ் அபகரிக்க முயல்வதாகக் கூறி, தற்கொலை கடிதம் எழுதி கையில் வைத்துக்கொண்டு, உடலில் பெட்ரோலை ஊற்றி வட்டாட்சியா் அலுவலகத்திலேயே தீ வைத்துக்கொண்டாா்.

அங்கிருந்தவா்கள் மோகன்ராஜின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனா். இருப்பினும், அவா் பலத்த தீக்காயமடைந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த வளத்தி போலீஸாா், மோகன்ராஜை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதுகுறித்து வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.