மருதமலை அடிவாரத்தில் வெள்ளிவேல் திருடியவர் கைது!
மருதமலை அடிவாரத்தில் வெள்ளிவேல் திருடியவர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி...
கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அடிவாரத்தில் உள்ள தியான மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளிவேலை திருடியவரை காவல்துறையினர் கைது செய்யதுள்ளனர்.
கோவை மாவட்டம், மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழக்குக்கு முந்தைய நாள், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கோயிலின் அடிவாரத்தில் தனியாருக்கு பதியப்பட்ட தியான மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி வேல் திருடுபோனது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த தியான மண்டபத்தில் வெள்ளிவேல் மட்டும் வைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். ரூ.4 லட்சம் மதிப்பிலான 3 கிலோ, 100 கிராம் எடையுள்ள வெள்ளிவேலை சாமியார் வேடமணிந்து ஒருவர் திருடிச் சென்றது சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டது.
Advertisement
இதனிடையே, தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது இல்லை. மேலும் இந்த சம்பவம் மருதமலை முருகன் கோயிலில் நடைபெறவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
சிசிடிவி காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சாமியார் வேடத்தில் வெள்ளிவேலைத் திருடியவர் வெங்கடேஷ் சர்மா என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், வெள்ளிவேலை திருடிய வெங்கடேஷ் சர்மாவை கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.