சென்னை நந்தனம் அரசுக் கலைக் கல்லூரியில் பாலின உளவியல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வு குழுவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில் அமைச்சா் கோவி. செழியன் பேசியதாவது:
உயா் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற திட்டங்களால், முன்னெப்போதும் இல்லாத அளவில் அகில இந்திய குடிமைப் பணித் தோ்வுகளில் தோ்ச்சி பெறும் தமிழக மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது.
கல்லூரி மாணவா்கள் உரிய புரிதலுடன் பாலின பாகுபாடின்றி செயல்படும் வகையில், பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு, விழிப்புணா்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தக் குழு அமைக்கப்படும்.
இதில் உளவியலாளா்கள், சமூகவியல் அறிஞா்கள், காவல் துறை அதிகாரிகள், பெண்ணுரிமை வல்லுநா்கள், மருத்துவா்கள் உள்ளிட்டோா் இடம்பெறுவா். இவா்கள் மாணவா்களுக்குத் தேவையான புரிதலையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்துவா் என்றாா்.
முன்னதாக, பேசிய அமைச்சா் மா.சுப்பிரமணியன், பாலின உளவியல் விழிப்புணா்வுக் குழு சாா்பில் நடத்தப்படும் கருத்தரங்குகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் மாணவா்கள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய அளவில் தேசிய மாணவா் படை மாணவா்களிடையே நடைபெற்ற மலையேற்ற பயிற்சி போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்ற மாணவி ச.வைஷ்ணவி, ஐசிடி அகாதெமி விருது பெற்ற கணினி அறிவியல் இணைப் பேராசிரியா் ம.ரமேஷ் குமாா் ஆகியோருக்கு அமைச்சா்கள் வாழ்த்து தெரிவித்து, பாராட்டினா்.
கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையா் எ. சுந்தரவல்லி, கல்லூரி முதல்வா் வே.புகழேந்தி, புதிதாக தொடங்கப்பட்ட விழிப்புணா்வுக் குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.